×

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை? : வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

சென்னை : தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் தற்போது சில இடங்களில் மழை பெய்துவருகிறது. அடுத்த சில தினங்களுக்கான மழை பற்றிய முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் ( டிசம்பர் 28, 29) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

டிசம்பர் 30ம் தேதி கடலோர மாவட்டங்கள், மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.டிசம்பர் 31, ஜனவரி 1 தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இன்றும் நாளையும் ( டிசம்பர் 28, 29) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஏனைய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Center , வானிலை ஆய்வு மையம்
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...