ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்களின்றி நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் 3ம் கால அபிஷேகத்தின்போது மூலவருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசனம்கோலாகலமாக நடந்தது. அதிகாலை 3 மணிக்கு நான்கு மாட வீதிகளில் கோயில் மணி ஒலித்து, 3.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, 3.45 மணிக்கு திருமஞ்சன சேவையும், அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை பூஜை, தேவாரம், 4.30 மணி முதல் கால அபிஷேகம் நடந்தது. இந்த பூஜைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 6 மணிக்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு லிங்கோத்பவ கால அபிஷேகம் நடந்தது. காலை 7 மணி முதல் 9 மணி வரை கோயில் வளாகத்தில் தங்க கொடி மரம் அருகே உள்ள நடராஜர் சன்னதியில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.
இதைத்தொடர்ந்து, நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், உற்சவர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீஞானபிரசுனாம்பிகா சமேத ஸ்ரீகாளஹஸ்திஸ்வரருக்கு(உற்சவர்) சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் சன்னதி எதிரே 10 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. 3ம் கால அபிஷேகத்தின்போது கோயிலில் உள்ள மூலவர் காளஹஸ்திஸ்வரருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை தாயாருக்கு நண்பகல் 2 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு பிரதோஷ கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஹரிகட்லா உற்சவம் நடந்தது. இந்த அனைத்து நிகழ்ச்சிகளும் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி நடந்தது.