வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகேயுள்ள குன்னுவாரன்கோட்டை கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் குன்னுவாரன்கோட்டை ஊராட்சிக்குட்பட்டது மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாய். இந்த கண்மாய் 68.50 ஹெக்டேர் பரப்பளவு உடையது. இந்த கண்மாய்க்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் இருந்து ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பறவைகள் உணவு தேடியும், இனவிருத்திக்கும் வருகின்றன. உள்நாட்டு வலசை பறவைகளும் இந்த கண்மாயில் உள்ள மரங்களில் தங்கி இனவிருத்தி செய்ய வருகின்றன. இதுவரை இந்த கண்மாயில் 109 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இப்படி ஒரே இடத்தில் இந்தளவு பறவைகள் பதிவு செய்யப்பட்டது இங்கு தான்.
புள்ளி மூக்கு வாத்துகள், முக்குளிப்பான்கள், நத்தை கொத்தி நாரைகள், பெரிய, சிறிய, நடுத்தர நீர்க்காகங்கள் பாம்பு தாராக்கள், அன்றில்கள், நீலத்தாழைக்கோழிகள், சங்குவளை நாரைகள், கூழைக்கடாக்கள், உண்ணிக்கொக்குகள், குருட்டுக்கொக்குகள், சிறிய, நடுத்தர, பெரிய கொக்குகள் போன்ற நீர்ப்பறவைகள் இங்கு நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. மேலும் காமன் பைபர், உட்சேண்ட் பைபர் ,கிரீன சேண்ட் பைபர், பார்ன்ஸ்வாலோ உள்பட 25 வகையான வெளிநாட்டு பறவைகளும் இங்கு வருகின்றன. நீர்த்தேக்க பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்கள் இந்த கண்மாயின் சிறப்பாகும். இந்த மரங்கள் நீர்ப்பறவைகள் இளைப்பாறவும், இன விருத்தி செய்யவும் மிகவும் உதவுகின்றன. பறவைகள் வருகையால் இப்பகுதியில் பல்லுயிர்ச்சூழல் சம நிலை அடைய உதவி புரிகிறது.
இத்தகைய சிறப்புமிக்க கண்மாய் மூலம் பல்லுயிர்சூழல் சம நிலை அடைய உதவும் முக்கியத்துவம் குறித்து அறியாமல், கண்மாயில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு விட்டன. பறவைகள் சரணாலயத்திற்கான அத்தனை தகுதிகளும் உள்ள இந்த கண்மாயை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பறவைகள் சரணாலயமாக வனத்துறையினர் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சாலையில் அடிப்பட்டு உயி௫க்கு போராடும் பறவைகள், நோய்வாய்ப்படும் பறவைகளை மீட்டு அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை கடந்த 3 ஆண்டுகளாக செய்து வரும் பறவைகள் நல ஆர்வலர் வாழைக்குமார் கூறுகையில், ‘‘உலகளவில் அழிந்து வரும் பறவைகள் வகைகளில் ஐந்து இனங்கள் இந்த கண்மாயில் காணப்படுகின்றன பறவைகளை பாதுகாக்கும் பொறுப்பு மனிதர்களுக்கே உள்ளது. ஏனென்றால் மனிதர்களின்றி பறவைகளால் வாழ முடியும். ஆனால் பறவைகள் இன்றி மனிதர்களால் வாழ முடியாது. மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாயை உடனடியாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, மரங்கள் வெட்டுவதை தடை செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு குறைந்தது 3 குளங்களையாவது பறவைகளுக்காக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்.