சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான மேதா பட்கர், தேசிய அமைப்பாளர் அருள்தாஸ், நிர்வாகி சுரேஷ், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் உதயகுமார், பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சுந்தர்ராஜன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
இந்த சந்திப்புக்கு பிறகு சென்னை, தலைமை செயலக வளாகத்தில் மேதா பட்கர் நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு முக்கிய முடிவுகளை சட்டப்பேரவையில் எடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அனைத்து மாநிலங்களும் குறைந்தபட்ச ஆதார விலையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதேபோல் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் உணவு, பால், காய்கறிகள் உள்ளிட்ட அடிப்படை பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை, கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை ஆகியவற்றை திருப்பித் தரவேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டேன்.
அதேபோல் மத்திய தொகுப்பு தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெண் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை போன்ற உயிர்கள் வாழும் காடுகளை பாதுகாக்க, 2006ம் ஆண்டு வன உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டமானது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் ஆதிவாசி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
யானைகளின் நடமாட்டத்தை வலசை செல்லும் பகுதிகளை அடையாளப்படுத்த வேண்டும். விவசாய சட்டத்தை எதிர்த்தது போல, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மக்களை நகரத்திற்கு வெளியில் குடியிருக்க வைப்பது, தீண்டாமை என்றும், இதுகுறித்த விரிவான அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.