×

டிச.17-ம் தேதி டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!: மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என அறிவிப்பு..!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டம் டிசம்பர் 17ம் தேதி டெல்லியில் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக ஹல்தர் நியமிக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். காவிரி தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 17ம் தேதி காலை 11:30 மணியளவில் நடக்கும் இக்கூட்டத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் உள்பட, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.

கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முடிவை எடுத்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பான விவாதங்களை விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியத்தின் காரணமாக இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களில் விவாதம் நடைபெறவில்லை.

இந்நிலையில், டிச.17-ம் தேதி டெல்லியில் கூடும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. 


Tags : Cavir Management Commission ,Delhi ,DC17 ,Cloudy Dam , Dec. 17, Delhi, Cauvery Management Authority
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...