×

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல்..!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுகவை இனி இரட்டை தலைமையே வழிநடத்தும் என்பதை உறுதி செய்யும் வகையில் கட்சியின் சட்ட விதிகளில் கடந்த புதன் அன்று மாற்றம் செய்யப்பட்டது. அதிமுக விதிகள் மாற்றப்பட்ட மறுநாளே உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர்  இரண்டு தினங்களுக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்னையன் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற 6ம் தேதி கடைசி நாளாகும். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. 8ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.


Tags : Associate ,Pannersalvam ,Edipadi Palanisami , AIADMKO.Panneerselvam, Edappadi Palanisamy, Candidate
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...