பெரம்பூர்: சென்னை யில் கனமழை காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். குறிப்பாக வட சென்னைக்கு உட்பட்ட முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் தடுமாறி விழுந்து செல்கின்றனர். மேலும், இந்த சாலைகளில் காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, போக்குவரத்து போலீசாரே தற்காலிகமாக மேற்கண்ட சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வியாசர்பாடி போக்குவரத்து எஸ்.ஐ.க்கள் காசி விஸ்வநாதன், பாலாமணி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று தங்கள் பகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் கல்லூரி சாலை, வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலம் கீழ் பகுதி, வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் லாரிகளில் ரப்பீசை கொண்டு வந்து சாலை பள்ளங்களில் கொட்டி சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், வாகன ஓட்டிகள் சிரமமில்லாமல் சென்றனர்.