ஆலந்தூர்: பாஷ்யம் நிறுவனத்துக்கு அரசு நிலத்தை வழங்கியதன் மூலம் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக அமைப்பு செயலாளர் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் அளித்திருந்த புகார் தொடர்பாக ஆஜர் ஆகும்படி ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையினர் அனுப்பிய சம்மனுக்காக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் 3 பேரும் கூட்டாக சதி செய்து அரசாங்க சொத்தை விற்றதால் ஏற்பட்ட மோசடி குறித்து ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த ஏப்.5 ல் திமுக சார்பில் புகாரளித்தேன். அதன் அடிப்படையில் மேல் விசாரணைக்கு இன்று ஆஜர் ஆகி வாக்குமூலம் அளித்தேன்.
கோயம்பேடு அருகே அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை கடந்த 8.2.21 அன்று, அதாவது தேர்தல் அறிவிப்பு வெளி வர உள்ள நிலையில் 10,15 நாட்களுக்கு முன்பாக அரசுக்கு பேரிழப்பு ஏற்படுத்தி விற்பனை செய்ய அதிமுக அரசு சார்பில் உத்தரவு போடப்பட்டது சட்டப்படி அரசு இடத்தை தனியாருக்கு விற்க கூடாது , மருத்துவமனை உள்ளாட்சி கட்டடம் , கல்லூரி , பள்ளி கட்டுமானத்திற்காக மட்டுமே தனியாருக்கு வழங்கலாம். ஏலத்தில் மூலம் விற்கலாம்.
ஆனால் ஜெயலலிதா வழயில் வந்த இவர்கள் அதை மீறி நிலத்தினை விற்பனை செய்துள்ளனர். 10.5 ஏக்கர் இடத்தை பாஷ்யம் நிறுவனத்திற்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்துள்ளனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை கோயம்பேடு சந்திப்பு அருகேயுள்ள இந்த இடத்தை சதுர அடி 12,500 க்கு விற்பனை செய்துள்ளனர் ஆனால் தற்போது சதுர அடி 25,000 ரூபாய் மார்க்கெட் மதிப்பாக உள்ளது. ஓபிஎஸ் -சின் 3 பிள்ளைகள் பங்குதாரர்களாக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம்தான் பாஷ்யம் நிறுவனம் அந்த நிறுவனத்தின் பெயரிலான காரைத் தான் ஓபிஎஸ் உட்பட அவரது குடும்பத்தினர் தற்போது பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக அரசுக்கு 500 கோடி இழப்பு. ஏற்பட்டுள்ளது நிலம் விற்பனை செய்வதற்கு துறையின் அமைச்சராக இருந்த ஆர் பி உதயகுமார் காரணமாக இருந்துள்ளார். நிலத்தை விற்பனை செய்ய ஒரே வாரத்தில் சிஎம்டிஏ அப்ரூவல் கிடைத்துள்ளது. திட்டமிட்டு அரசு நிலத்தை ஆக்கிரமித்த மூவரும் குற்றவாளிகள் என புகார் அளித்திருந்தேன் நான் அளித்த ஆதாரம் தொடர்பாக இங்கு வெளிப்படையாக கூற முடியாது. வேலுமணி மீதும் நான் லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கும் தொடுத்தேன். அந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.
அதேபோல்,மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் தலைகால் புரியாமல் பின்விளைவு தெரியாமல் , அதிகமாகபேசி வருகிறார். எம்ஜிஆரின் செல்லப் பிள்ளையாகவே இருந்த துரைமுருகன், அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவர் அவரை ‘ காடு வா..வா ‘ என அழைப்பதாகவிமர்சித்து வருகிறார். இதேபோல்தான் கருணாநிதியை மூட்டை கட்டி எடுத்து வருவார்கள் என ஜெயலலிதா பேசியிருந்தார். ஆனால் கருணாநிதி எவ்வளவு காலம் வாழ்ந்து இறந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். செல்லூர் ராஜு வாங்கியுள்ள வணிக வளாகங்களை மதுரையில் நேற்று பார்வையிட்டேன். விரைவில் அவர் மீதும் புகார் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.