சென்னை: தமிழகம் முழுவதும் 90 நீர்த்தேக்கங்கள் 91.14 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வள ஆதாரத்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. கடந்த 6ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சென்னையை சுற்றியுள்ள முக்கிய நீர்த்தேங்கள் முழுமையாக நிரம்பியுள்ளது. இதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நீர்த்தேக்கங்கள் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இந்தநிலையில், நேற்று வரையில் தமிழகத்தில் 90 நீர்த்தேக்கங்கள் 91.14 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வள ஆதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களான பூண்டி-88.33 சதவீதம், சோழவரம்-73.73 சதவீதம், செங்குன்றம்-86.24 சதவீதம், செம்பரம்பாக்கம்-81.98 சதவீதம், தேர்வாய் கண்டிகை- 100 சதவீதம் கொள்ளவை எட்டியுள்ளது. இதேபோல், குண்டாறு, அடவிநைனார் கோவில் 100 சதவீதத்தை எட்டியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், பேச்சிப்பாறை- 91.84 சதவீதம், பெருஞ்சாணி - 94.33 சதவீதம், சித்தாறு 1- 88.64 சதவீதம், சித்தாறு 2- 89.66 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கம் - 94.12%, நம்பியாறு- 85.15 %, தென்காசி மாவட்டம் குண்டாறு- 100% எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து மணிமுத்தாறு நீர்த்தேக்கம் 52.22% எட்டியுள்ளது. மொத்தம் 17 நீர்த்தேக்கங்கள் 100 %கொள்ளவை எட்டியுள்ளது.