×

ஐயப்பன்தாங்கலில் இருந்து மந்தைவெளி சென்றபோது சைதை அரங்கநாதன் சுரங்கப்பாதை தண்ணீரில் மாநகர பஸ் சிக்கியது: படகு மூலம் பயணிகள் பத்திரமாக மீட்பு

சென்னை: சென்னை ஐயப்பன்தாங்கலில் இருந்து மந்தைவெளி நோக்கி நேற்று காலை சென்ற மாநகர பேருந்து ஒன்று, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற 3 அடி தண்ணீரில் சிக்கியது. அப்போது தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் பஸ்சில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
சென்னையில் கடந்த 5 நாட்களாக பெய்த கன மழை காரணமாக நகரம் முழுவதும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் சென்னை முழுவதும் உள்ள சுரங்கப்பாதைகள் அனைத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு மாநகர போலீஸ் தடை வித்துள்ளது.

இதற்கிடையே சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் தேங்கிய தண்ணீரை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் வெளியேற்றினர். இதனால் கனரக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களை அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாக அனுமதிக்கப்பட
வில்லை. இந்நிலையில் நேற்று காலை ஐயப்பன்தாங்கலில் இருந்து மந்தைவெளி நோக்கி ‘12 எம்’ மாநகர பேருந்து வந்தது. சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை டிரைவர் கணிக்காமல் பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது பஸ் சுரங்கப்பாதையில் 3 அடி தண்ணீரில் சிக்கி நின்றது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 2 பயணிகள், டிரைவர், நடத்துனர் ஆகிய 4 பேர் சிக்கிக் கொண்டனர். அதேநேரம் சுரங்கப்பாதையில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வந்ததால் உடனே சம்பவம் குறித்து தி.நகரில் உள்ள தீணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி தி.நகர் தீயணைப்பு அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து ரப்பர் படகு மூலம் சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகள் உட்பட 2 போக்குவரத்து ஊழியர்களையும் மீட்டனர். மேலும், தண்ணீரில் சிச்கிய மாநகர பேருந்தையும் தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Saitai Aranganathan tunnel ,Manthaiveli ,Ayyappanthangal , Ayyappanthangal, Manthaiveli, Saitai Aranganathan tunnel, city bus, boat, passengers safely rescued
× RELATED சென்னையில் இருந்து கேரளாவிற்கு...