×

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட கூடாது என பாகிஸ்தான் விரும்புகிறது: மாநாட்டை புறக்கணித்தற்கு இந்திய அரசு கண்டனம்..!!

டெல்லி: ஆப்கானிஸ்தான் பிரச்னை பற்றி விவாதிக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளவிலான மாநாட்டை புறக்கணிக்கும் பாகிஸ்தான் முடிவுக்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், இடைக்கால அரசை உருவாக்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்தும், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மௌலவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

இதற்கு சீனா, பாகிஸ்தான் தவிர வேறு எந்த நாடும் ஆதரவளிக்கவில்லை. இவ்விரு நாடுகளும் தலிபான் அரசுக்காக உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துவருகின்றது.  இந்த நிலையில்,  ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அரசை அங்கீகரிக்கத் தவறுவது, ஆப்கானிஸ்தானில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தும் என்றும், பின்னர் இது உலகிற்கே பிரச்சனையாக மாறும் என்றும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாகீதின், அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளவிலான 3வது மண்டல மாநாட்டை வருகின்ற 10ம் தேதி இந்தியா நடத்துகிறது. இதில் ஆப்கானிஸ்தான் பிரச்னை பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா, ஈரான், மத்திய ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இதனையடுத்து, பல நாடுகள் மாநாட்டில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் மாநாட்டில் பங்கேற்க, பாகிஸ்தான் வழக்கம் போல் மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன் ஈரானில் நடந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளவிலான 2 மாநாடுகளையும், பாகிஸ்தான் புறக்கணித்தது. பாகிஸ்தான் முடிவு பற்றி வெளியுறவு செய்தி தொடர்பாளர் பேட்டியளித்ததாவது: மாநாட்டை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்பது எதிர்பார்த்து தான். ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட கூடாது என, பாகிஸ்தான் விரும்புகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : Afghanistan ,Indian government , Afghanistan, Pakistan, Government of India, Condemnation
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி