×

4 திருமணம் செய்து கணவர் மோசடி: கலெக்டர் ஆபீசில் மனைவி புகார்

திருப்பூர்: கணவர் மீது 4 திருமணம் செய்து மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த சந்தியா (28) என்பவர் குழந்தைகளுடன் வந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நானும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சிங்காரம் (29) என்பவரும் கடந்த 2012ல் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். சிங்காரம் டெய்லராக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் என்னையும், குழந்தைகளையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் விட்டுவிட்டு சிங்காரம் திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் திருப்பூருக்கு வந்தேன். அப்போது சிங்காரம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது. மேலும் அவரை பற்றி விசாரித்தேன். அப்போது அவர் என்னைப்போல மேலும் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களை சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Marriage, Husband, Collector's Office, Wife
× RELATED மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு...