×

ராஜஸ்தானில் ஆசிரியர்களுக்காக நடத்திய தேர்வில் பிட் அடிக்க செருப்புக்குள் புளூடூத்: 3 பேரை பிடித்தது போலீஸ்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நேற்று ராஜஸ்தான் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு (ரீட்) நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 4,200 மையங்களில் நடந்த இத்தேர்வில் மையங்களில், 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில், முறைகேடுகள், வினாத்தாள் கசிவு, காப்பி அடிப்பது போன்ற மோசடிகள் நடப்பதை தடுக்க, மாநிலம் முழுவதும் போலீஸ் துணையுடன் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. தேர்வுக்கு வந்தவர்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டனர். முழுக்கை சட்டை அணிந்து வந்தவர்களுக்கு, பாதி கை சட்டையாக வெட்டப்பட்டது.

மேலும், இணையதளத்தை பயன்படுத்தி காப்பி அடிப்பதையும், வினாத்தாள், விடைகள் பரிமாற்றம் செய்யப்படுவதையும் தடுக்கவும், மாநிலம் முழுவதும் ஜெய்ப்பூரை தவிர மற்ற இடங்களில்  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இணையதள வசதி துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு முன்பாக, தேர்வு மையங்களுக்கு வெளியிலும் போட்டியாளர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர். அப்போது, பிகானிர் மாவட்டத்தில் உள்ள காங்காசாகர் பகுதியில் தேர்வு எழுத வந்த 3 போட்டியாளர்களின் நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததால், போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், செருப்பில் புளுடூத் பொருத்தி இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Tags : Rajasthan , Bluetooth: 3 caught by police in Rajasthan
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை