புழல்: சோழவரம் ஒன்றியம் நல்லூர் 15வது வார்டு பாடியநல்லூர் 18வது வார்டு ஆகிய பகுதிகளில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான இடைத்தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் 15 மற்றும் 18வது வார்டுகளில் ருக்மணி ரவிச்சந்திரன், மாலதி மகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்தும், இடைத்தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், நேற்று முன்தினம் மாலை பாடியநல்லூரில் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் ஒன்றிய செயலாளர் மீ.வே.கருணாகரன் தலைமை தாங்கினார். சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, இடைத்தேர்தலில் திமுகவினரின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். பின்னர், இடைத்தேர்தல் பிரசார வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் காசிம் முகமது, விஜயன், சீனிவாசன், வீரம்மாள் ராஜி, துரைவேலு, சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.