திருச்செந்தூர் : குரும்பூர் கூட்டுறவு வங்கியில் 261 நகை பொட்டலங்கள் மாயமான விவகாரத்தில் வங்கி தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். செயலர் உள்ளிட்ட மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவ்வங்கியில் பல கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 3,800 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவ்வங்கியில் நகைக்கடன், விவசாய கடன், தனிநபர் கடன் என 500க்கும் மேற்பட்டோருக்கு கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் 5 பவுன் தங்க நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கேற்ப வங்கி வாரியாக இந்நகை கடன் தள்ளுபடி சலுகை யாருக்கு எல்லாம் கிடைக்கும் என்பது குறித்து வங்கி அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இதற்காக அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விவரம் திரட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆழ்வார்திருநகரி வட்டார கூட்டுறவு வங்கி கள அலுவலரும், கூட்டுறவு சார்பதிவாளரான ஆழ்வார்குமாரிடம் குரும்பூர் வங்கியின் நகை அடமான கடன் குறித்தும், மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர்கள் கேட்டறிந்தனர். அவர், வங்கியில் ஆய்வு மேற்கொண்ட போது சில குளறுபடிகள் இருந்ததாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 8ம் தேதி மற்றும் 13ம் தேதி நகை கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மொத்தம் நகை கடனாக பெறப்பட்ட 548 நகை பொட்டலங்களில், 261 பொட்டலங்கள் மாயமானது தெரிய வந்தது.
இது அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தொடர்ந்து நடத்திய விசாரணையில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் 2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. இதுகுறித்து வங்கியின் வாடிக்கைகயாளர்களுக்கு தெரிய வந்ததால் அவர்கள், அடுத்தடுத்த நாட்களில் தங்கள் நகைகள் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்த பணம் இருக்கிறதா? என்று பார்ப்பதாக வங்கி முன்பு திரண்டு வருகின்றனர்.
இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான பாண்ட் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வங்கியில் லட்சக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள், விசாரணை குழுவினரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
இதையடுத்து வங்கி தலைவர் முருகேசப் பாண்டியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். கூட்டுறவு சார்பதிவாளர் ஆழ்வார்குமார், செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்சி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். வங்கி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், துணை தலைவரான பரிசமுத்து, வங்கி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.