×

தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; ஆர்எஸ்எஸ் பிரமுகர் கேசவ விநாயகத்திடம் 5 மணி நேரம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி போலீசார் 5 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இதுவரை இந்த வழக்கில் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் வைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் பாஜ தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் மற்றும் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். பிறகு வாக்குமூலத்தின் அடிப்படையில், ஓட்டலில் இருந்து பணத்தை கொடுத்து அனுப்பியதாக கூறப்படும் பாஜ தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தன், ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகம், முரளி ஆகியோரை நேரில் ஆஜராக பல முறை சிபிசிஐடி சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகாமல் பல்வேறு காரணங்களை காட்டி காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்நிலையில் ரூ.4 கோடி வழக்கில் நேற்று நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி கடந்த வாரம் சம்மன் அனுப்பி இருந்தனர். அந்த சம்மனை தொடர்ந்து கேசவ விநாயகம் நேற்று காலை 11 மணிக்கு எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம், ரூ.4 கோடி பணம் யாருடையது, நயினார் நகோந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக இந்த பணத்தை வசூலித்து கொடுத்து அனுப்பியது யார் என சரமாரியாக 50க்கும் மேற்பட்ட கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர்.

அதற்கு அவர் பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் ரூ.4 கோடி பணம் குறித்து முக்கிய தகவலை அளித்ததாக கூறப்படுகிறது. அந்த தகவலை சிபிசிஐடி போலீசார் வாக்கு மூலமாக பதிவு செய்து கொண்டனர். 5 மணி நேரமாக நடந்த விசாரணை மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். பல முறை சம்மன் அனுப்பி அவர் நேரில் ஆஜராகாமல் பல்வேறு காரணங்களை தொடர்ந்து கூறி வருவதால், சிபிசிஐடி போலீசார், நயினார் நாகேந்திரனை அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

The post தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; ஆர்எஸ்எஸ் பிரமுகர் கேசவ விநாயகத்திடம் 5 மணி நேரம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : RSS ,Kesava Vinayaka ,CBCID ,CHENNAI ,Tambaram railway station ,Nellie ,
× RELATED அதீத நம்பிக்கையில் இருந்த பாஜவுக்கு...