×

தஞ்சாவூரில் 99 ஆண்டுகள் குத்தகை காலம் முடிந்த மூன்று கட்டிடங்களை கையகப்படுத்த மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பழமையான தஞ்சாவூர் யூனியன் கிளப், காவிரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கம் ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் இன்று காலை கையகப்படுத்தியது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நூற்றாண்டுகள் கடந்த தஞ்சாவூர் யூனியன் கிளப், காவிரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கம் ஆகியவை செயல்பட்டு வந்தன. இவற்றில் காவிரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கத்துக்கான 99 ஆண்டுகள் குத்தகை காலம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதேபோல, 100 ஆண்டுகள் கடந்த யூனியன் கிளப்புக்கு ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை எனக் கூறப்படுகிறது.

எனவே ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றும் சட்டத்தின் கீழ் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுமாறு தொடர்புடைய நிர்வாகங்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தினர். இருப்பினும் இந்த இடங்கள் காலி செய்யப்படாமல் இருந்து வந்தன. எனவே ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றும் சட்டத்தின் கீழ் இந்த கட்டிடங்களைக் கையகப்படுத்தியதற்கான நோட்டீஸை அவற்றின் நுழைவுவாயிலி ஒட்டுமாறு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இதன்படி மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள் இன்று காலை ஜூபிடர் திரையரங்கத்துக்குச் சென்றனர். தொடர்ந்து திரையரங்க வாயில் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

அதில், தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான மேற்கண்ட இடம் தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுதல்) 1975-ன் படி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இவ்விடத்தில் நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தகவலைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதமாக தண்டோரா போடப்பட்டது. இதையடுத்து, காவிரி லாட்ஜ் வாசல், யூனியன் கிளப் வாசல் கதவிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதையொட்டி, காவல் துறையினர் பாதுகாப்புக்காக அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர். கையகப்படுத்தப்பட்ட யூனியன் கிளப் 29,743 சதுர அடியும், காவிரி லாட்ஜ் 40,390 சதுர அடியும், ஜூபிடர் திரையரங்கம் 13,605 சதுர அடியும் பரப்பளவு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Municipal ,Commissioner ,Tangavur , Thanjavur, Corporation Commissioner
× RELATED திருவேற்காடு நகராட்சியில் தூய்மை...