சென்னை: தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அறிஞர்களை விடுதலை செய்ய கோரியும், உபா. சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்று, ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்பி பேசுகையில், ‘மராட்டிய மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தூண்டுதலின்பேரில் ஒடுக்கப்பட்ட மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். இதை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.போராட்டம் நடத்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தேவையின்றி வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. உபா சட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கைது செய்யப்படுவதை ஒன்றிய அரசு கைவிடவேண்டும்’ என்றார். ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.