சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் காலையில் புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்த வேலூரை சேர்ந்த சமியுல்லா (28) என்பவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவர், 2019ம் ஆண்டில் சார்ஜாவுக்கு வேலைக்கு செல்வதாக விசா வாங்கி விட்டு, இந்தியாவால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று 8 மாதங்கள் தங்கியிருந்தது தெரிந்தது. தற்போதும் சார்ஜா சென்று ஏமன் செல்ல இருப்பதையும் கண்டுபிடித்தனர். எனவே, அவரை நிறுத்தி வைத்து விசாரித்தனர். அப்போது, அலுவலக பணியாக சார்ஜாவில் இருந்து ஏமன் நாட்டிற்கு சென்றதாக கூறினார். அந்த விளக்கத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதையடுத்து சமியுல்லாவின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.