×

ஏடுகளின் உச்சியில் எழுதுகிறோம் 'அண்ணா துணை'!: பேரறிஞர் அண்ணாவை புகழ்ந்து கவிஞர் வைரமுத்து ட்வீட்..!!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியிருக்கிறார். திமுக என்ற புத்தம் புதிய கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் அண்ணாவின் பேச்சுக்களுக்கும், எழுத்துக்களுக்கும் பெரும் பங்குண்டு. திராவிட நாடு இதழின் வழியாக தொண்டர்களுக்கு அண்ணா எழுதிய கடிதங்கள் நாட்டு நடப்பை மட்டுமின்றி கட்சி கொள்கைகளையும் விளக்கின. தென்னாட்டு பெர்னாட்ஷா என அழைக்கப்பட்ட அண்ணா, மெட்ராஸ் ஸ்டேட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியவராவார். சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர். மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களையும் அவர் முன்னெடுத்துள்ளார். இந்நிலையில், பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து, பேரறிஞர் அண்ணாவை புகழ்ந்து அவர் தம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,

மறைந்து
அரைநூற்றாண்டு கடந்தும்
உன்
மைய அச்சில்தான் சுழல்கிறது
மாநில அரசியல்

எல்லா உணவிலும்
தண்ணீரின் சாரமிருப்பதுபோல்
எல்லா நிகழ்விலும்
உன் சாயலிருக்கிறது

இருமொழிக் கொள்கைக்கும்
இனவழி உரிமைக்கும்
நீயே காப்பு

ஆகவே,
ஏடுகளின் உச்சியில் எழுதுகிறோம்
அண்ணா துணை

என்று பேரறிஞர் அண்ணாவை புகழ்ந்து வைரமுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Tags : Emperor ,Anna , The top of the magazines, 'Anna Sub', Grandfather Anna, Vairamuthu
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்