×

கொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது

சென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர் கொடநாடு எஸ்டேட் வாங்குவது முதல், மாஜி அமைச்சர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை பெயர் மாற்றம் செய்தது, பின்னர் கொலை சம்பவத்துக்குப் பிறகு அந்த சொத்துகள் மீண்டும் பெயர் மாற்றம் செய்தது என பல குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மேலும், பல மாஜி அமைச்சர்களின் சொத்து குவிப்புக்கு அவர்கள் உடந்தையாக இருந்ததும், தெரியவந்துள்ளது.

சிபிசிஐடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைவிசாரணை நடத்தியது. பத்திரப்பதிவு துறை சார்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய பலரும் பெரிய அளவில் முறைகேடு செய்திருப்பதும், அதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துகளை வாங்கி குவித்திருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து, பதிவுத்துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகள் சென்னைக்கு வரும்படி அழைக்கப்பட்டனர். 3 நாட்களாக சென்னையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இவர்களில் 7 அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து அந்த துறையின் செயலாளர் ஜோதி நிர்மலா சாமி நேற்று உத்தரவிட்டார். அதில், கோவை மாவட்ட பதிவாளராக (தணிக்கை) இருந்த செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த பதவிக்கு மத்திய சென்னை மாவட்ட பதிவாளர் பிரபாவதி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊட்டி மாவட்ட பதிவாளராக (நிர்வாகம்) பணியாற்றி வந்த செல்வநாராயணசாமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மதுரை தெற்கு மாவட்ட பதிவாளராக பணியாற்றிய சீனிவாசன், ஊட்டி மாவட்ட பதிவாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். கோவை சிங்காநல்லூர் மாவட்ட பதிவாளர் கரீம் ராஜா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த பதவியில் புதுக்கோட்டை மாவட்ட பதிவாளராக (நிர்வாகம்) இருந்த குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட பதிவாளராக இருந்த பெரியசாமி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். கடலூர் மாவட்ட பதிவாளராக (தணிக்கை) இருந்த வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளராக (நிர்வாகம்) இருந்த செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு சென்னை திருவல்லிக்கேணி மாவட்ட பதிவாளராக இருந்த கவிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, ஈரோடு பதிவு மாவட்ட உதவி ஐஜியாக இருந்த ராஜா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். வேலூர் பதிவு மாவட்ட (நிர்வாகம்) உதவி ஐஜியாக இருந்த லோகநாதன் ஈரோடு பதிவு மாவட்ட உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை பதிவு மாவட்ட உதவி ஐஜியாக (நிர்வாகம்) இருந்த சுரேஷ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அந்த பதவிக்கு தற்போது மதுரை தெற்கு பதிவு மாவட்ட உதவி ஐஜியாக இருந்த செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களில், செல்வக்குமார் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த 19 ஆண்டுகளாக ஒரே பதிவு மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் 19 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் யாரும் பணியாற்றியதில்லை. சசிகலாவின் உறவினர் ராவணன் மூலம்தான் இந்த மாவட்டத்துக்கு வந்தார்.  அதன்பின்னர் கோவை கணபதியில் 3 ஆண்டுகள், பெரியநாயக்கன் பாளையத்தில் இரண்டரை ஆண்டுகள், சூலூரில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு பெற்று காந்திபுரம் 2 ஆண்டுகள், சிங்காநல்லூர் 2 ஆண்டுகள், கோவை மாவட்ட தணிக்கை பிரிவில் 3 ஆண்டுகள் என மொத்தம் 19 ஆண்டுகளும் கோவை பதிவு மாவட்டத்தில் பணியாற்றினார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் முழுமையாக இவரது கட்டுப்பாட்டில் இருக்கும்.

கோவையில் வேலுமணி கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் இவரும் அவரது ஆதரவாளராக மாறிவிட்டார். கோவை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர்களிடம் இவர்தான் மாதம் ரூ.50 ஆயிரம் வீதம் வசூலித்து, அமைச்சர் ஒருவரிடம் கொடுப்பாராம். அமைச்சர்தான் அந்தப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை ஒவ்வொரு மாதமும் வரவழைத்து லஞ்சமாக கொடுப்பாராம். இதனால் கோவை மாவட்டம் மட்டுமல்லாது மேற்கு மண்டலமே செல்வக்குமாரின் கட்டுப்பாட்டில் வந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை கூட முன்கூட்டியே செல்வக்குமாரிடம் அனுமதி வாங்கித்தான் சோதனை நடத்த முடியும்.மீறி சோதனை நடத்தினால் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளையே மாற்றிவிடுவார். சர்வ வல்லமை பொருந்தியவராக இருந்தார் செல்வக்குமார். தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை இவரை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றியபோது ஒரு மணி நேரத்தில் அந்த மாறுதலை ரத்து செய்துள்ளார்.
இவருடைய தீவிர ஆதரவாளராக இருந்தவர்தான் பெரியசாமி. இவரும் பல ஆண்டுகளாக கோவை பதிவு மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். ஊட்டியில் நிர்வாகப் பிரிவு மாவட்ட பதிவாளராக இருந்த செல்வநாராயணசாமி, ஆரம்பத்தில் மதுரையில் பணியாற்றினார். செல்வக்குமார்தான் இவரை ஊட்டிக்கு அழைத்துச் சென்றார்.

ஊட்டியில் கொடநாடு இவரது எல்லைக்குள்தான் வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளாக ஊட்டியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவருக்கு முன் பணியாற்றியவர்களில் ஒருவர் கூட 2 ஆண்டுகள் பணியாற்றியது இல்லை. கரீம் ராஜாவும், செல்வக்குமாரின் ஆதரவாளராகத்தான் இருந்தார். அதேபோல, உதவி ஐஜிக்களாக இருந்த சுரேஷ், ராஜா ஆகியோரும் செல்வக்குமாரின் டீமில்தான் இருந்தனர். இவர்கள் அனைவருமே ஒன்றாகத்தான் செயல்படுவார்கள். தினமும் ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்வார்கள். இவர்கள் பணியாற்றிய காலங்களில் நடைபெற்ற பதிவுகள் குறித்து ஆய்வு செய்தால் பல ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்தது தெரியவரும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

தற்போது நேர்மையாகவும், விரைவாகவும் பணியாற்றிவரும் அமைச்சர் மூர்த்தி, முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளாராம். கோவை மாவட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த கமிஷன் அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சம்பந்தம் இல்லாமல், கிருஷ்ணகிரியில் உள்ள செந்தில்குமார் மாற்றப்பட்டுள்ளார். இவர், வேறு நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

* செல்வக்குமார் சிவகங்கை மாவட்டத்தைச்  சேர்ந்தவர். இவர், கடந்த 19 ஆண்டுகளாக ஒரே பதிவு மாவட்டத்தில் பணியாற்றி  வருகிறார்.
* தமிழக பதிவுத்துறை வரலாற்றில் 19 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில்  யாரும் பணியாற்றியதில்லை.

Tags : Kodanadu ,Assistant Ministers ,7 Registration Officers ,Western , Kodanadu, Echo of assistance to former ministers 7 Registration officials change action: Western Zone becomes vacant
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...