சென்னை: சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: கொடைக்கானல் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் ஏரியில் படகு ஓட்டும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி, அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏரியைச் சுற்றியுள்ள இயற்கை எழிலை ரசிக்கவும், அதன் மூலம் நகராட்சியின் வருவாயை மேலும் அதிகரிக்கச் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. மிகவும் மதிப்புமிக்க மற்றும் பிரபலமான சுற்றுலா தலம் ஒன்றில் சுற்றுச்சூழல் நிலையை பாதுகாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் படகு ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த நோக்கத்திற்காக தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.