திண்டுக்கல்: கொடநாடு வழக்கில் எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்தான் என சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் நேற்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு, தமிழக முதல்வரின் தேவையான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு செவிசாய்க்க வேண்டும். கொடநாட்டில் அசம்பாவிதம் நடந்தது உண்மைதான். அதை யாரும் மறுக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது. அதில் விசாரணை நடத்த வேண்டும் என கூறுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்? எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் தானே? அவர்களை விசாரணை நடத்துவதில் தவறில்லை. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை 9 மாவட்டங்களில் போட்டியிட சமகவினர் ஆர்வம் காட்டி மனுக்கள் கேட்டு வருகின்றனர். அந்தந்த பகுதிகளில் நிர்வாகிகள் கூட்டணியுடன் சேர்ந்து நிற்பதாக கூறினால் அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.