சென்னை: கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின் போது பாலியல் தொந்தரவு கொடுத்த குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆர்.சுதா ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆட்கொணர்வு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று ஆசிரியர் ராஜகோபாலன் மனைவி சுதா உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தனது கணவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளது. எனவே, வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.