×

அசாமில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்‍கு!: காசிரங்கா தேசிய பூங்காவில் காண்டாமிருகம் உள்ளிட்ட 24 அரிய வகை விலங்குகள் பலி..!!

திஸ்பூர்: அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருகில் சிக்கி காசிரங்கா தேசிய பூங்காவில் காண்டாமிருகம் உள்ளிட்ட 24 அரிய வகை விலங்குகள் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அசாமில் பெய்த தொடர் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டு 700 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 16 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. 2 லட்சத்து 60 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட மக்‍கள் இருப்பிடங்களை இழந்து தவிக்கின்றனர். இவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

 20 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விளை நிலங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. கவுகாத்தி நகரை சுற்றியுள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அப்பகுதி மற்றும் வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டன. காசிரங்கா தேசிய உயிரியல் பூங்காவின் சுமார் 70 விழுக்காடு நிலப்பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது.

இந்நிலையில், காசிரங்கா தேசிய பூங்காவில், காண்டாமிருகம் உள்ளிட்ட 24 அரிய வகை விலங்குகள் உயிரிழந்ததாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 17 நாற்கொம்பு மான்களும், 2 சதுப்பு நில மான்களும், 2 காண்டாமிருகங்களும், காட்டெருமைகள், மலைப்பாம்புகள், லங்கூர் வகை குரங்குகள் உள்ளிட்டவை உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. இதனிடையே வெள்ளத்தில் சிக்‍கித்தவித்த 4 வயதான காணடாமிருக குட்டி உள்ளிட்ட 4 விலங்குகளை மீட்டுள்ளதாக பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Azam ,Kasiranga National Park , Assam, Flood, Kaziranga National Park, Animals
× RELATED சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசம் கானுக்கு 10 ஆண்டு சிறை