சென்னை:பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தை மீறி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியிருந்தது. மேலும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனம், அதன் நிறுவனர்கள் உட்பட 9 பேருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களுக்கு 1.35 பில்லியன் டாலர் (10,600 கோடி) அபராதம் விதித்ததோடு, அதை ஏன் சந்திக்கக் கூடாது என்று அதற்கான உரிய விளக்கத்தை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது.
இந்த நோட்டீசை எதிர்த்து பிளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அந்த நிறுவனத்திலிருந்து தான் 2010ம் ஆண்டு விலகி விட்டதாகவும் தனக்கும் தற்போது நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அமலாக்கத் துறை கடந்த 12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் இது குறித்து 3 வாரத்துக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.