டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் தங்கம் கிடைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில், 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள், தடகளம், வில்வித்தை, பேட்மிட்டன், டேபிள்டென்னிஸ் உள்ளிட்ட 9 வகையான விளையாட்டுகளில் கலந்துகொண்டுள்ளனர். இதில் ஈட்டி எறிதலில் 68.55 மீட்டர் தூரம் வீசியெறிந்து பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் சுமித் அண்டில்.
தனது முதல் 2 வீச்சிலும் 2 புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார் சுமித். பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் புதிய உலக சாதனை படைத்துள்ளார். சுமித் அண்டிலின் வெற்றி மூலம் ஒரே நாளில் 2 தங்கப் பதக்கத்தை வெல்கிறது இந்தியா. டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது. 23 வயதாகும் சுமித் ஹரியானா மாநிலம் சோனிப்பட்டை சேர்ந்தவர். 2005-ம் ஆண்டு நேரிட்ட பைக் விபத்தில் இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை இழந்தவர் சுமித்.