×

ஒன்றிய அரசின் திட்டங்களை பற்றி ஏழை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமுதாய வானொலி: இணை அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

புதுடெல்லி: ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள இணையமைச்சர் எல்.முருகன், 2 நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ளார். சுட்டூர் மடத்தின் ஜகத்குரு டாக்டர் ஸ்ரீ சிவராத்திரி ராஜேந்திர மகாசுவாமியின் 106வது ஜெயந்தி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, மைசூருவில் உள்ள ஜேஎஸ்எஸ் கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜேஎஸ்எஸ் சமுதாய வானொலி சேவையை நேற்று காலை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், ‘‘ஏழை மக்களுக்கும் ஒன்றிய அரசின் நலத் திட்டங்களுக்கும் இடையேயான இணைப்பு பாலமாக சமுதாய வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன. கொரோனா காலக்கட்டத்தில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய போது, அது பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றின.

அதேபோல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், மன அழுத்த மேலாண்மை முதலியவை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தின. சமுதாய வானொலி நிலையங்களில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது. இதுபோன்ற வானொலி நிலையங்களை அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அளிக்கும்,’’ என்றார்.  தற்போது, நாடு முழுவதும் 329 சமுதாய வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 22 வானொலி நிலையங்கள் கர்நாடகாவில் செயல்படுகின்றன.

மைசூரில் நேற்று தொடங்கப்பட்ட ஜேஎஸ்எஸ் சமுதாய வானொலி, அந்த நகரத்தின் 3வது நிலையமாகும். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, 75வது சுதந்திர தின அம்ருத் மஹோத்ஸவத்தின் ‘ஐகானிக் வார’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மைசூரு அகில இந்திய வானொலி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்பட கண்காட்சியையும் அமைச்சர் முருகன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Tags : Community Radio ,L. Murugan , United States Government, Programs, Awareness, Radio, L. Murugan
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...