சத்தியமங்கலம்: ஆசனூர் அருகே சாலையோரம் நடமாடிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.
நேற்று காலை சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிறுத்தை நடமாட்டத்தை கண்ட காரில் சென்ற நபர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். வாகனங்கள் நிற்பதை கண்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இது குறித்து தகவலறிந்த ஆசனூர் வனத்துறையினர் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.