×

பிஇ படிப்பு சேர்க்கைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை: உயர்கல்வி துறை வெளியிட்டது

சென்னை: பிஇ, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றுடன் கடைசி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை சுமார் 1 லட்சத்து 66 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் சான்றுகளை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.  கட்ஆப் மதிப்பெண்கள் கணக்கிடும் போது, கணக்கு, இயற்பியல், வேதியியல், மற்றும் கணினி அறிவியல் பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கொண்டு கட்ஆப் கணக்கிடும் முறை கடந்த ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.

இந்த கல்வி ஆண்டில் கட்ஆப் கணக்கிடும் போது எப்படி கணக்கிட வேண்டும் என்பதை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழக (ஏஐசிடிஇ) தலைவர் சகஸ்ரபுத்தே கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு பிறகு பல மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் அவர்களை வரிசைப்படுத்தும் போது சீனியாரிட்டி கடைபிடிக்க வேண்டும். அதற்காக ஒரே கட்ஆப் எடுத்த மாணவர்களில் யார் மூத்தவர் என்று கண்டறிய சில வழிமுறைகளையும் ஏஐசிடிஇ தெரிவித்து இருந்தது. அதை தமிழக உயர்கல்வித்துறை ஏற்று தமிழக அரசிதழில் தற்போது வெளியிட்டுள்ளது.  

அதன்படி, கணக்கு, இயற்பியல், விருப்பப் பாடங்களின் மதிப்பெண்கள், பிளஸ் 2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், பிறந்த தேதி, சமவாய்ப்பு எண் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட வேதியியல் பாடம் மேற்கண்ட பட்டியலில் இடம் பெறவில்லை.  நாளை பிஇ ரேண்டம் எண்: பிஇ, பிடெக் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு நாளை ரேண்டம் எண் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 4ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tags : Department of Higher Education , BE Admission, Department of Higher Education
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!!