×

ஜோலார்பேட்டை பகுதியில் வாணியம்பாடி- திருப்பத்தூர் நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை பகுதியில் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக மாறி அடிக்கடி பல்வேறு விபத்துகள் நடைபெற்று வந்தது. மேலும்  பஸ்களிலும், வாகனத்திலும் பயணிக்கும்போது கால விரயம் அதிகமாகி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனையடுத்து பொதுமக்களும், பல்வேறு கட்சி நிர்வாகிகளும் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வரை உள்ள நெடுஞ்சாலையை புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழக நெடுஞ்சாலையாக இருந்த இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றப்பட்டு இரு வழிச்சாலையை நான்கு வழி சாலையாக அமைப்பதற்கு ₹299 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு சாலை விரிவாக்கம் செய்து நான்கு வழி தார் சாலை அமைக்க கடந்த ஆண்டு பூமி பூஜை செய்ப்பட்டது. பின்னர், சாலையோரங்களில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு சாலை விரிவாக்கப் பணி மற்றும் கல்வெர்ட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சாலையை வாணியம்பாடியில் இருந்து பொன்னேரி வரை ஒரு பகுதியாகவும், பொன்னேரியில் இருந்து ஜோலார்பேட்டை வரை ஒரு பகுதியாகவும், ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரை ஒரு பகுதியாகும் என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு சாலைகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சாலைகளில் மின்கம்பங்கள் அப்புறப்படுத்துதல், கல்வெர்ட்டு பணிகள், மரங்கள் அகற்றுதல் போன்ற பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலை அமைப்பதற்கான 50 சதவீதப் பணி முடிவடைந்துள்ளது.

தற்போது பொன்னேரி பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி ஒரு பகுதி நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் சாலை விரிவாக்கம் கல்வெர்ட்டு பணி மரங்கள் அகற்றுதல் மின்கம்பங்கள் அகற்றுதல் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 80 சதவீத பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றப்பட்டு நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் பல்வேறு தொழில் சார்ந்த அமைப்பினரும், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Vaniyambadi-Tirupati ,Jolarpettai , Vaniyambadi- Tirupattur in Jolarpet area Intensity of four-way road construction work: Public, motorists happy
× RELATED தி.மலை மக்களவை தொகுதிக்குட்பட்ட...