×

45 ஆண்டுகள் பழமையான தாமரைக்குளம் ரூ.3.70 லட்சத்தில் சீரமைப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் ரூ. 3.70 லட்சம் செலவில், 45 ஆண்டு பழமையான தாமரை குளம், தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கும் பணி தொடங்கியது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு, இந்த ஊரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அருகில் பழைய பேரூராட்சி அலுவலகத்திற்கு பக்கத்தில் தாமரை குளம் உள்ளது. இந்த குளத்தை சுமார் 45 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி மக்கள் குடிநீர் குளமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது இந்த குளம் புதர்கள் மண்டி செடி, கொடிகள் படர்ந்துள்ளது.

மேலும், அப்பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் இந்த குளத்தில் கலக்கிறது. மேலும், இறைச்சி கடைகளின் கழிவுகள் இந்த குளத்தின் அருகில் கொட்டப்படுகிறது. இதனால், இந்த குளம் கழிவுநீர் குளமாக மாறிவிட்டது. மேலும், தற்போது இந்த குளத்தில் செடி, கொடிகள் படர்ந்து குளமே தூர்ந்து விட்டது. மேலும், இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், கடந்த 13 வருடத்திற்கு முன்பு  குளத்தை சுற்றி பூங்கா அமைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து கடந்த 2019ம் வருடம் ஜூலை மாதம் பேரூராட்சி சார்பில், கலெக்டர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தூர்ந்து விட்ட தாமரை குளத்தை தூர்வாரி சீரமைத்து அதை சுற்றிலும் படிகட்டுகள் கட்டி பூங்கா அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தினகரன் நாளிதழில் பல முறை செய்தி வெளியாகி இருந்தது. இதன் செய்தி எதிரொலியாக, பேரூராட்சி சார்பில் ரூ.3.70 லட்சம் செலவில் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான தாமரை குளத்தை சீரமைக்கும் பணிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வேகமாக  நடைபெற்று வருகிறது. 


Tags : Tamaraikkulam , Lotus pond, alignment
× RELATED பட்டிவீரன்பட்டி தாமரைக்குளம்...