ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள சாம்ராஜ் வனப்பகுதியில் தேயிலை கழிவுகளை கொட்டிய பகுதிகளில் வனத்துறை ஆய்வை துவக்கியுள்ளனர். ஊட்டி அருகே சாம்ராஜ் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புகாடு உள்ளது. இங்கு ஏராளமான காட்டு மரங்கள், கற்பூரம் மற்றும் சீகை மரங்கள் போன்றவைகள் உள்ளன. இது மட்டுமின்றி, இந்த வனத்தில் காட்டு மாடுகள் அதிகளவு உள்ளன. சிறுத்தை, கரடி, புலி உட்பட பல்வேறு வன விலங்குகளும் வாழ்கின்றன. இந்நிலையில், இந்த வனத்தை ஒட்டியுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் மிஞ்சும் தேயிலை கழிவுகள் இந்த வனப்பகுதிகளுக்குள் கொட்டப்படுகிறது.
மேலும், தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் நீரோடையில் கலக்கிறதுஇதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, தண்ணீர் மாசடைந்து வன விலங்குள் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வனங்கள் மற்றும் விலங்குகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்டது. குந்தா வனத்துறையினர் இந்த வனப்பகுதியில் தற்போது ஆய்வை துவக்கியுள்ளனர். வனங்களில் கழிவுகள் கொட்டப்பட்ட பகுதியில் நேற்று வனத்துறையினர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.