* விரைவில் திறக்க ஏற்பாடு * டீன் ஜெயந்தி தகவல்
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. மருத்துவ வல்லுனர்கள் அறிவித்தபடி கொரோனா 3வது அலை வரத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் 3வது அலை வரும் பட்சத்தில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மருத்துவ மனைகளில் குழந்தைகளுக்கு என கூடுதலாக சிறப்பு வார்டுகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 250க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளுடன் குழந்தைகள் வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் முதல் அலையின் போது 575 படுக்கைகள் இருந்த நிலையில், ஆக்சிஜன் படுக்கைகள், கான்சன்ரேட்டர் கருவிகள் என 1,020 படுக்கைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 15 ஐசியூ படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை டீன் ஜெயந்தி கூறியதாவது: கொரோனா 2வது அலையை சிறப்பாக கையாண்டு தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அனைத்து மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் முதற்கட்டமாக ஐசியூ பிரிவில் 15 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் மனதை கவரும் வகையில் அவர்களுக்கு பிடித்தது போன்று சுவர்களில் வண்ண ஓவியங்கள், பொம்மைகள், கார்ட்டூன் படங்கள் போன்றவை வரையப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கடந்த ஒரு வாரமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விரைவில் திறந்து வைக்க இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.