ராம்பூர்: பயிர் சாகுபடியில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய சலுகை பெறுவதற்காக பாஜகவை சேர்ந்த நடிகை மோசடி செய்ததாக, விவசாய சங்கத் தலைவர் பகீர் குற்றம்சாட்டி உள்ளார். கடந்தாண்டு நவம்பரில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம், தொடர்ந்து காஜிப்பூர், சிங்கு எல்லையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், காஜிப்பூர் எல்லையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. இங்கு, 26,000 விவசாயிகளில் 11,000 விவசாயிகள் போலியானவர்கள். ஆலை உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அதிகளவு கொள்ளையடித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக என்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அதனால், சிபிஐ விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும். பள்ளிகள் மற்றும் கட்டிடங்கள் இருக்கும் இடங்களை விவசாய நிலமாக காட்டி மோசடி செய்துள்ளனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவரும், நடிகையுமான ஜெய பிரதா, ராம்பூரில் உள்ள பள்ளி நிலத்தை, விவசாய நிலமாக காட்டி அதில் கோதுமை சாகுபடி செய்ததாக கூறி ஆதாயம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக சமர்பிக்கப்பட்ட ஆவணங்களில் தெளிவாக தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராம்பூர் தவிர உத்தரபிரதேசத்தின் மற்ற மாவட்டங்களிலும் இதேபோன்று மோசடிகள் நடந்துள்ளன’ என்றார்.