போபால்: மத்தியப்பிரதேசத்தில் வெள்ளப்பகுதிகளில் சிக்கிக்கொண்ட அம்மாநில உள்துறை அமைச்சர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் 2 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மத்திய பிரதேசமும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. சிவ்புரி, ஷியோப்பூர், குவாலியர் மற்றும் தாதியா உள்ளிட்ட பகுதிகளில் 1,800க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. இதையடுத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுக்கள், ராணுவம் மற்றும் விமானப்படை ஈடுபட்டு வருகிறது. மத்திய பிரதேசத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இதற்கிடையே தாதியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க சென்ற மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அவரை இந்திய விமானப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.