திருப்பதி: திருப்பதி அடுத்த புத்தூர் மண்டல அலுவலகத்தில் கிராமப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ ரோஜா வழங்கினார். அப்போது தப்பாட்டம் இசைத்தபடி நடனமாடினார். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், சித்தூர் மாவட்டம் திருப்பதி அடுத்த புத்தூர் மண்டல அலுவலகத்தில் நடிகையும், நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா கிராமப்புற கலைஞர்களுக்கு தப்புமேளம், கால் சலங்கை மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பையை நேற்று வழங்கினார்.
இதில், புத்தூர் மண்டலத்தை சேர்ந்த 72 கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர், எம்எல்ஏ ரோஜா கிராமப்புற கலைஞர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து மேளம் அடித்து தப்பாட்டம் ஆடி அவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது, அவர் பேசுகையில், ‘ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் அனைத்து பிரிவினர்களுக்கும் உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து நல்லாட்சி செய்து வருகிறார்’ என்றார். மண்டல அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.