சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பட திறப்பு விழாவில் திமுக கலந்து கொள்ளவில்லை. எனவே, தலைவர் கலைஞர் பட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுகிறார்கள். ஜெயலலிதா பட திறப்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு மட்டுமே அனுப்பி வைத்தார்கள். ஆனால், நாங்கள் அப்படி இல்லை. இந்த விழாவை நடத்த திட்டமிட்டபோதே தலைவர் ஸ்டாலின் என்னை அழைத்து எதிர்க்கட்சிகளின் தோழமையோடு நடக்க வேண்டும். எனவே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியை தொடர்பு கொண்டு, அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும். குடியரசு தலைவர், ஆளுநர் அமரும் வரிசையில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும். அவர் வாழ்த்துரை வழங்க வேண்டும் என்று என்னிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். நானும் தொலைப்பேசியில் எதிர்க்கட்சி தலைவரை தொடர்பு கொண்டேன். அப்போது, நீங்கள் விழாவிற்கு வர வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். நீங்கள் வர வேண்டும். அந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என்று கூறினேன்.
நீங்கள் கட்டாயம் வர வேண்டும் என்று கூறினேன். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, நான் காரில் சேலத்திற்கு போகிறேன். நான் போய் சேர்ந்த பிறகு அனைவரிடமும் கலந்து ஆலோசித்து சொல்வதாக கூறினார். நான் அப்போது கூட சொன்னேன். உங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றேன். நான் சேலத்திற்கு போய் சேர்ந்த பிறகு நிச்சயம் சொல்கிறேன் என்று கூறினேன். ஆனால், அவர் விழாவுக்கு வரவில்லை என்று என்னிடம் கூறவில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர், சட்டப்பேரவை செயலாளரை தொடர்பு கொண்டு விழாவிற்கு நான் வரமாட்டேன் என்று கூறினார். எதிர்க்கட்சி தலைவரை தொடர்பு கொண்ட பேசியது நான். ஆனால், அவர் என்னிடம் சொல்லவில்லை. மாறாக செயலாளரிடம் பதில் அளித்தார். பாஜ தலைவர் அண்ணாமலை பட திறப்பு விழாவில் கலந்து கொண்டதை முழு மனதோடு வரவேற்கிறேன். அவரின் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறேன். முதல்வர் பொம்மை இப்போது தான் பொறுப்பேற்றுள்ளதால், துடிப்போடு பேசியுள்ளார். விவரம் தெரிந்த பிறகு அவரே புரிந்து கொள்வார்.