சென்னை: உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து கண்டறிய, தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டீன் தேரணிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் வங்கியை துவங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், இந்த ஆண்டு முடிவதற்கு முன்பாக 7 மருத்துவ கல்லூரி மற்றும் 5 மாவட்ட மருத்துவமனை என 12 இடங்களில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்படும். மேலும் செப்டம்பர் மாதம் மத்தியில் தமிழகத்தில் கொரோனா 3வது அலை உச்சம் தொட வாய்ப்பிருப்பதாகவும் 42,000 வரை தினசரி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐஐடி கணிப்பு தெரிவித்துள்ளது. தமிழக அண்டை மாநிலங்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப மாநில எல்லை பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும். உருமாறிய கொரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது.