×

ஒன்றிய அரசு வழங்கிய தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ்கள் அதிகம் செலுத்தி தமிழக அரசு சாதனை: ஒரு சொட்டு கூட வீணாகவில்லை

சென்னை: ஒன்றிய அரசு வழங்கிய தடுப்பூசிகளை விட கூடுதலாக 5,88,243 லட்சம் டோஸ்கள் அதிகம் செலுத்தி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது, என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்  வி தடுப்பூசி போடப்படுகிறது.  இதில், ஸ்புட்னிக்  வி தடுப்பூசி, ஒருசில தனியார் மையங்களில் மட்டுமே  போடப்படுகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போடுவதில் மக்களிடையே  ஒரு விதமான  பயம் இருந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கம்  காட்டினர். மக்களின் அச்சத்தை போக்க அப்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை டோஸ்கள் வீணடிக்கப்பட்டது.

இந்நிலையில்  மே 7ம் தேதி முதல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனாவை கட்டுப்படுத்த  ஒரே வழி தடுப்பூசி தான் என அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது. மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான்  தமிழகத்தில் இருந்து கொரோனா தொற்றை ஒழிக்க முடியும் என்றும் கூறினர். தொடர்ந்து,  பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்  கொள்கின்றனர். பல இடங்களில் மக்கள் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் தினசரி, 1.50 லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை  தடுப்பூசி  போடப்படுகிறது.

இதனால், ஒன்றிய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு  கிடைக்கும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. மாநில அரசின் நேரடி  கொள்முதலும் அதிகளவு கிடைக்கவில்லை. இதனால், அடிக்கடி தடுப்பூசி  தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனிடையே, தடுப்பூசிகள் ஒன்றிய அரசின் தொகுப்புகளில் இருந்து வரும் நிலையில் காலதாமதம் இல்லாமல் தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி ஒன்றிய  அரசின் தொகுப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 91 லட்சம் தடுப்பூசிகள்   வந்துள்ளது. மேலும் நேற்று 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தது. இதன்மூலம், நேற்று வரை 1,91,50,418 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி  போடப்பட்டுள்ளது.

நாளை 2 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு விடும். அதன்படி, ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு அனுப்பிய  தடுப்பூசிகளை விட 5,88,243 டோஸ்கள் அதிகம் போட்டு தமிழக அரசு சாதனை  படைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஒரு சொட்டு தடுப்பூசி கூட  வீணடிக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.  இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘கேரளாவில் முன்பு இதுபோன்று தடுப்பூசிகள் கூடுதலாக போடப்பட்டது.

தற்போது தமிழகத்தில் இரண்டு மாதங்களில் மருத்துவர்கள், செவிலியர்களின் தீவிர முயற்சியால், ஒன்றிய அரசு வழங்கிய தடுப்பூசிகளை விட 5,88,243 டோஸ்கள் கூடுதலாக போடப்பட்டுள்ளது. மேலும் ஒரு குப்பிகளில் 10 முதல் 11 டோஸ்கள் இருக்கும். அதில் எதையும் வீணாக்காமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்களிடையே தயக்கம் இருந்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதையடுத்து மற்ற மாநிலங்களை விட கூடுதலாக தடுப்பூசிகள் போடப்பட்டு சிறந்த மாநிலமாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினசரி, 1.50 லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை  தடுப்பூசி  போடப்படுகிறது.இதனால், ஒன்றிய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு  கிடைக்கும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை.

Tags : TN Government ,Union Government , The Union government, the vaccine, the Tamil Nadu government, is not in vain
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...