சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் தான் ஒரே வழி என்பதால் தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி குறித்து மக்களிடையே பயம் இருந்ததால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டினார்கள். அதன்பிறகு தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.ஆனால் மத்திய அரசிடம் இருந்து போதிய அளவு தடுப்பூசி வழங்காததால் அவ்வப்போது தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு தடுப்பூசிகள் வந்த பிறகு போடப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 1,88,23,296 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதைப்போன்று சென்னை மாநகராட்சி சார்பில் 45 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசியும் போடு பணி நடைபெற்று வருகிறது. அதைப்போன்று சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 21ம் தேதி 19,878 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 28,90,251 பேர் தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட 5 மாநிலங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலை தொடரும் வகையில் மாநகராட்சி சார்பில் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னையில் உள்ள முக்கியமான ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் வரும் மக்களுக்கு தடுப்பூசி ெசலுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி 10 ஷாப்பிங் மால்கள் மற்றும் 38 சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த தடுப்பூசி மையம் செயல்படுகிறது. இங்கு வந்த 15 நிமிடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதுபோல் மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 59 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் இதுவரை சுமார் 36 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியை போட்டுள்ளனர். 10 லட்சம் பேர் 2 டோஸ்கள் முழுமையாக போட்டு பாதுகாப்புடன் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.