சென்னை: தமிழர் முன்னேற்றப் படை வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசாமி கேரளாவில் கைது செய்யப் பட்டார். சென்னை ராமாபுரம், ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் வீரலட்சுமி(33). இவர், தமிழர் முன்னேற்றப்படை என்ற கட்சியை நடத்திவருகிறார். கடந்த சில தினங்களாகவே இவரது செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் வீரலட்சுமி புகார் அளித்திருந்தார். நடவடிக்கை எடுக்காததால் அரிவாளை காட்டி நீதி கேட்டு வீடியே வெளியிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
பின்னர் வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோக்கள் வந்த செல்போன் எண்ணை போலீசார் டிராக் செய்து பார்த்தனர். அதில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, கரியன்மேடு கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி(37) என்பவரின் செல்போன் எண்ணில் இருந்து வந்தது தெரியவந்தது. அரியலூருக்கு சங்கர் நகர் போலீசார் சென்று பார்த்தபோது, கேரள மாநிலத்தில் ஆரோக்கியசாமி வேலை செய்துவருவதாக தெரியவந்தது. போலீசார் கேரளாவுக்கு சென்று ஆரோக்கியசாமியை கைது செய்து சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அதில் எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து தனிமையில் வசிக்கிறேன். அப்போதுதான் பேஸ்புக் மூலம் தமிழர் முன்னேற்ற படை கட்சித் தலைவர் வீரலட்சுமியின் அறிமுகம் கிடைத்தது.
அவரது செல்போனில் அடிக்கடி ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்தேன். நான் சாலை அமைக்கும் பணிக்காக அடிக்கடி கேரளா செல்வேன். அங்கு என்னை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என நினைத்து, இதுபோன்ற தவறை தொடர்ந்து செய்து வந்தேன். ஆனால் எனது செல்போன் சிக்னலை வைத்து, என்னை போலீசார் கைது செய்துவிட்டனர் என தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.