புதுடெல்லி: ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஷிவ் நாடார், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர் நிறுவனத்தின் ஆலோசகராக பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் (76) உள்ளார். இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 23.5 பில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவியை ஷிவ் நாடார் ராஜினாமா செய்துள்ளார். இருந்தாலும், அவர் நிறுவனத்தின் ஆலோசகராக தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீடிப்பார். ஹெச்சிஎல் நிறுவன தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சி.விஜயகுமார், நிர்வாக இயக்குநராக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.