×

சட்டசபை நிகழ்வுகளை டிவியில் ஒளிபரப்பு செய்ய கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:
சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப் பிரச்னைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமான்யனும் அறிந்துகொள்ள உதவக்கூடியது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென கோரி  2012ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை அதிமுக அரசு சாக்குப்போக்கு சொல்லி நிலுவையில் போட்டுவிட்டது. இந்தியப் பாராளுமன்றத்தின் நிகழ்ச்சிகள் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் நேரடியாக ஒளிபரப்பாகின்றன.

கேரள சட்டமன்ற நிகழ்வுகள் இணைய வழியில் வெப் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இதற்கென்றே தனியாக ஒரு யூடியூப் சானலும் உள்ளது. நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியான  மானியக்கோரிக்கை விவாதங்கள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஆவன செய்யவேண்டும். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகளவில் ஊடகவியலாளர்கள் சட்டமன்ற வளாகத்தில் கூடுவதை இந்த நேரடி ஒளிபரப்பு குறைக்கக் கூடும். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு இணைய வழி நேரடி ஒளிபரப்பு செய்வது ஒரு சவாலான விஷயமாக இருக்காது. எனவே இதற்கு ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.




Tags : Kamallhassan , கமல்ஹாசன்
× RELATED உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை...