×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம் 13 பிரச்னைகளை கிளப்ப திமுக முடிவு: நீட் தேர்வு, மேகதாது, தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க நோட்டீஸ்

புதுடெல்லி: மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், நீட் தேர்வு ரத்து, கர்நாடகாவின் மேகதாது அணை திட்டம், தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதில் ஒன்றிய  அரசு காட்டி வரும் பாரபட்சம் உட்பட 13 முக்கிய பிரச்னைகள் கிளப்ப திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விவாதிப்பதற்காக நோட்டீஸ் கொடுத்துள்ளது. நாட்டில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறியது, தடுப்பூசி பற்றாக்குறை, அதன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இது, ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இரு அவைகளும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட ஒன்றிய அமைச்சரவையில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களை, முதல் நாளில் பிரதமர் மோடி அவை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். தொடர்ந்து, 17 புதிய மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்கிறது. இவற்றில் 3 மசோதாக்கள் அவசர சட்டங்களுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த தொடரில் ஒன்றிய அரசுக்கு எதிராக பல முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கிளப்ப உள்ளன.

குறிப்பாக, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் ஒன்றிய அரசின் தவறான மேலாண்மை, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி நிறுவனங்களுடன் கூடுதல் விலைக்கு புதிய ஒப்பந்தம், ரபேல் விமான பேர ஊழலில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை கூட்டுவது, வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சீனா உடனான எல்லை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், இந்த தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்பதால், அவை சுமூகமா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது பற்றி  விவாதிப்பதற்காக டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

திமுக  சார்பில் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவும், எம்பி திருச்சி சிவாவும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு டி.ஆர்.பாலு அளித்த பேட்டி வருமாறு: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது நீட் தேர்வு ரத்து, மேகதாது அணை திட்டம், விலைவாசி உயர்வு, கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை, எல்லை பிரச்னை, மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு, வேளாண் சட்டங்கள், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, நியூட்ரினோ திட்டம், மின்சார திருத்த சட்டம், பெண்கள் இடஒதுக்கீடு, ஸ்டேன் சாமியின் மரணம் உப்பட 13 முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 31 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டத் தொடர் மிகவும் குறைவான நாட்கள் நடைபெறும் நிலையில், இது எப்படி சாத்தியமாகும் என திமுக சார்பில் கேள்வி எழுப்பி உள்ளோம்.

மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டாது என்பதை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதிப்படுத்தி தெரிவிக்க வேண்டும். ஏனெனில், கர்நாடகா அமைச்சரிடம் ஒரு பதிலையும், தமிழக அமைச்சரிடம்  ஒரு பதிலையும் ஒன்றிய அரசு தெரிவித்து வருவதால், இந்த விவகாரத்தை கண்டிப்பாக தெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர, கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள நாடு முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் மக்கள் தொகையை 6 கோடி என்று வைத்துக் கொண்டால் கூட, 12 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது. ஆனால், தற்போது வரை 1.75 கோடி தடுப்பூசிகளை தான் ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. அதனால், தடுப்பூசி விநியோகம் பற்றி ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்துக்கு தடுப்பூசி வழங்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டப்படுகிறது. அதனால், உடனடியாக மக்கள் தொகைக்கு  ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் நாடாளுமன்ற வளாகத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
* அவைக்கு வரும் அனைத்து உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், நெகட்டிவ் என வந்தவர்கள் மட்டுமே கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
* இரு அவைகளிலும் சமூக இடைவெளியுடன் எம்.பி.க்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
* தற்போது, மக்களவையில் உள்ள 539 உறுப்பினர்களில் 280 எம்பி.க்கள் மட்டுமே இருக்கைகளில் அமர வைக்கப்படுகிறார்கள். மீதமுள்ள 259 எம்பி.க்கள் பார்வையாளர்கள் மாடத்தில் அமர வைக்கப்படுவார்கள்.
* இதன் காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடரை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
* இதுவரை மக்களவையில் 444 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 218 உறுப்பினர்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுள்ளனர்.

* ஆரோக்கியமான விவாதத்துக்கு தயார்
மழைக்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடத்து குறித்து விவாதிக்க, டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று கூட்டினார். இதில் பேசிய பிரதமர் மோடி, பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துவதற்கு ஒன்றிய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

* நாடாளுமன்ற முற்றுகை விவசாயிகள் திட்டம்
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி எல்லையில் 100 நாட்களை கடந்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காததால், மழைக்கால கூட்டத்தொடரின்போது தினமும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. அதன்படி, நாளை முதல் கூட்டத்தொடர் முடியும் வரை விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

* பாஜ, காங்கிரஸ் ஆலோசனை
கூட்டத் தொடரை முன்னிட்டு, பாஜ நிர்வாக  குழு கூட்டம் மற்றும்  தேசிய  ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில், பிரதமர் மோடி, பாஜ தலைவர் நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, அதிமுக சார்பில் நவநீத கிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில், இத்தொடரில் சிறப்பாக செயல்படுவது பற்றியும். எதிர்க்கட்சிகள்  எழுப்ப திட்டமிள்ள பிரச்னைகள் சமாளிப்பது குறித்தும்  பேசப்பட்டது. அதேபோல், காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் சோனியா தலைமையில் காணொலி மூலம் நேற்று மாலை நடந்தது. அப்போது, இந்த தொடரில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான உத்தரவுகளை சோனியா பிறப்பித்தார்.

* கூட்டு கூட்டத்தில் உரை மோடிக்கு எதிர்ப்பு
நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, கொரோனா விவகாரம் குறித்து நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் இடையே பிரதமர் மோடி பேச திட்டமிட்டு இருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து், ‘கொரோனா விவகாரம் குறித்து அவையில்தான் விவாதிக்க வேண்டும். எதற்காக தனி கட்டிடத்திற்கு சென்று விவாதிக்க வேண்டும். விவாதங்கள், உரை என்று எதுவாக இருந்தாலும் அவையில்தான் நடக்க வேண்டும்,’ என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

* தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க வலியுறுத்தல்
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து எதிர்க்கட்சிகள்நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை அளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.


Tags : DMK ,monsoon , DMK decides to raise 13 issues in Parliamentary monsoon session starting today: Notice to discuss issues including NEET selection, cloud cover, vaccine distribution
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு