சாத்தான்குளம்: சாத்தான்குளம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நீலமேகவர்ணம், கடந்த 2003ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் கட்சி பணியை மட்டும் கவனித்த நீலமேகவர்ணம், தற்போது பிழைப்பிற்காக முன்பு பார்த்து வந்த ஆடு, மாடுகள் மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார். மேலும் தோட்டத்தில் வளர்த்து வரும் பனை, புளியமரங்களை கவனித்து வருகிறார்.
இது குறித்து நீலமேகவர்ணம் கூறுகையில், ‘‘எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுக உண்மை தொண்டனாக பணியாற்றி வருகிறேன். கடந்த 2003ம் ஆண்டு இடைத்தேர்தல் விளம்பரத்திற்காக சுவரில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்த போது அதிமுக வேட்பாளராக என்னை ஜெயலலிதா அறிவித்த தகவல் வெளியானது. ஜெயலலிதாவே தேர்தல் பிரசாரம் செய்தார். அதனால் நான் வெற்றி பெற்றேன். முதன்முதலில் சட்டமன்றம் சென்ற போது பேருந்தில் சென்றதை அறிந்து ஜெயலலிதாவே எனக்கு கார் வாங்கித் தந்தார். தற்போது நான் முன்பு பார்த்து வந்த ஆடு, மாடு மேய்க்கும் தொழிலை செய்து வருவதுடன் பனை, புளியமரம், முருங்கை வளர்த்து பராமரித்து வருகிறேன். இது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது’’ என்றார்.