×

அதிமுக ஆட்சியில் உரிய நடைமுறையை பின்பற்றாமல் விடப்பட்ட ரூ.240 கோடி மதிப்பிலான 2 டெண்டர்களை ரத்து செய்தது சென்னை மாநகராட்சி..!!

சென்னை: அதிமுக ஆட்சியில் உரிய நடைமுறையை பின்பற்றாமல் விடப்பட்ட ரூ.240 கோடி மதிப்பிலான 2 டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் விடுவதில் உரிய நடைமுறைகள் பின்பற்றாமல் அதிமுகவினருக்கு ஆதரவானவர்களுக்கு டெண்டர் விடப்பட்டதாக அறப்போர் இயக்கம் தொடர்ச்சியாக புகார்களை எழுப்பி வந்தது. இந்த புகார்களின் பேரில் சென்னை மாநகராட்சி ஆணையர் நடத்திய ஆய்வில் சில புகார்களில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் அடையாறு, அண்ணாநகர், கோடம்பாக்கம், ராயபுரம் உட்பட 43 இடங்களில் மழைநீர் வடிகால் கட்டமைப்பை புதுப்பிக்க மற்றும் சீரமைக்க கடந்த பிப்ரவரி மாதம் டெண்டர் விடப்பட்டது.

120 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டரில் உரிய நடைமுறையை பின்பற்றவில்லை என்ற புகாரின் அடிப்படையில் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 120 கோடி ரூபாய் மதிப்பில் 1,500 ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்க விடப்பட்ட டெண்டரும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி வலைத்தளங்களை பராமரிக்க கூடுதலான தொகைக்கு விடப்பட்ட டெண்டர் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 240 கோடி ரூபாய் மதிப்பிலான 2 டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai Corporation ,AIADMK , AIADMK rule, Rs 240 crore, tender, Chennai Corporation
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!