காத்மண்ட்: நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பாவை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலியின் பரிந்துரையின்பேரில், 2வது முறையாக நாடாளுமன்ற கீழவையை மே 22ம் தேதி அதிபர் பித்யா தேவி பண்டாரி கலைத்து உத்தரவிட்டார். நவம்பர் 12 மற்றும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் நேபாள காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சியினர், ஷேர் பகதூர் தேவ்பாவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சோலேந்திர ஷம்சர் ராணா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, ‘ஷேர் பகதூர் தேபாவை 24 மணி நேரத்தில் பிரதமராக நியமிக்க வேண்டும்’ என அதிபருக்கு உத்தரவிட்டனர்.