டெல்லி :ஒன்றிய அமைச்சரவையில் திடீரென மேற்கொள்ளப்பட்ட மெகா மாற்றங்களை காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் சாடி உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஹர்ஷவர்தன் விலகியதன் மூலம் கொரோனா பேரிடர் விவகாரத்தில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதை ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டு இருப்பதாக முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்துமே சரியாக நடந்தால் அதற்கான நற்பெயர் பிரதமருக்கு சென்றுவிடும். ஒருவேளை தவறு நடந்தால் அமைச்சர் தான் அதற்கு பொறுப்பு ஆவார் என்பதை புரிந்து கொள்ளலாம் என்று சாடியுள்ளார்.
தேர்தலுக்காகவே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்தலை மனதில் கொண்டே ஒன்றிய அரசு இந்த மாற்றத்தை செய்துள்ளது.புதிய அமைச்சரவையில் பட்டியல் வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அதிகம் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இது மக்களை திசை திருப்பும் ஒன்றிய அரசின் நடவடிக்கை ஆகும்.ஏதாவது நிர்பந்தம் இல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இவர்கள் எந்த வகையிலும் நன்மையை செய்துவிடப் போவதில்லை,என்றார்.