சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ்.இளங்கோவன், மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்களில் சிகிச்சைக்கு பின்பு குணமடைந்து வீடு திரும்பினார். இதை தொடர்ந்து தனது வழக்கமான பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி வந்துள்ளது. அதை தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விசாரித்து வருகின்றனர்.